இலங்கை தீவில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இதனை பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலா செல்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கப்பல் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை முதலில் தொடங்கியதும் சரிவர இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பல திட்டங்களோடு வந்த சுற்றுலா பயணிகள் வர தயக்கம் அடைந்தனர். இந்த நிலையில் தான் ஏற்கனவே செரியாபாணி என்ற பெயரில் கப்பல் இயக்கப்பட்ட நிலையில் அந்த கப்பலுக்கு பதிலாக சிவகங்கை என்ற பெயரில் வேறொரு கப்பல் இயக்கப்பட்டது. பல்வேறு வசதிகளோடு தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணிக்க www.Sailindsri என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் பயணிகள் சேவை நடைபெற்றது. கப்பல் பயண சேவை நம்பிக்கைக்குரிய வகையில் இயக்கப்பட்டதால் பயணிகள் வர தொடங்கினர். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் சேவையும் வழங்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்;தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், கப்பல் போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவோர் அதிகமாகினர்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை காலம் காரணமாக கடலில் புயல், மழை, கடல் சீற்றம், உள்ளிட்ட சீதோஷ்ண நிலை காரணமாக நாகை காhங்கேஷன் துறை இடையே இயக்கப்பட்டு வந்த கப்பல் சேவையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பருவமழை காலம் முடிவடைந்து கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளது.

நாகை – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையானது, கடந்த 12-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தொழில்நுட்ப அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனது. இதனால் சுற்றுலா பயணிகளும், வர்த்தகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் மூலம் ஸ்திரத்தன்மை சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து, வரும் 22 ஆம் தேதி முதல் நாகை இலங்கை காங்கேசன் துறை இடையிலான, பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. செவ்வாய்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்தியா-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.