22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

கோயில் மாநகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமான கோவில், காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மோட்சம் தரும் தலங்களில் ஒன்றாகவும் அன்னை காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களை தரும் அன்னையாக, பேசும் தெய்வமாக காமாட்சி அம்மன் அருள்பாலித்து வருகிறாள். தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சக்தி பீடமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், அன்னை பராசக்தியில் தொப்புள் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. அதனாலேயே இந்த தலம் நாபி பீடம் என அழைக்கப்படுகிறது.


தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. ‘கா’ என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.


காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், ‘அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது.
தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையயை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.


காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.


கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விஷேசமாகும்.


கருவறையில், அம்பிகையின் வலப்புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சிதரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம்.


பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சிஅ ம்மன். பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.


அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீ சக்ரத்தில் ‘ஸ்ரீ’ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் போன கடன்களும் வந்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.


அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்து கொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும்.


காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பசுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் காமாட்சியின், காமாட்சி பார பத்தாரிகா, தவ காமாட்சி, அஞ்ஜன காமாட்சி, ஸ்வர்ண காமாட்சி, உற்சவ காமாட்சி என ஐந்து வடிவங்களில் தரிசிக்க முடியும். 108 திவ்ய தேசங்களில் திருக்கல்வனூர் பெருமாள் கோவில் சிதிலமடைந்ததால், அக்கோவிலின் பெருமாள், இங்கு எடுத்து வந்து வைக்கப்பட்டார். அதனால் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் திருமாலின் வராக வடிவத்தை தரிசிக்க முடியும்.


இக்கோவிலில், சூரியன், சந்திரன், குபேரன் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. கி.பி.5 முதல் 8 ம் நூற்றாண்டுகளில் பல்லவ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது மாசி மாதத்தில் காமாட்சி அம்மனுக்கு தேர்த்திருவிழா, தெப்ப உற்சவம், பிரம்மோற்சவம் ஆகியன நடத்தப்படுகின்றன. இது தவிர நவராத்திரி, ஆடி, ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி, வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம் ஆகியவை நடத்தப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.


கோயில் நேரம் :
காலை 5 மணி துவங்கி, பகல் 12.15 மணி வரையிலும், மாலை 4 மணி துவங்கி 08.15 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 09.30 வரையிலும், பௌர்ணமி நாளில் இரவு 10.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோவில் அமைவிடம் :
காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கும், பஸ் நிலையத்திற்கும் மிக அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. சங்கர மடத்தை ஒட்டி அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் தான், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மற்ற முக்கியமான கோவில்கள் அனைத்திற்கும் துவக்கமாக அமைந்துள்ளது.