22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஈரானில் நடைபெற்ற 6-வது ஆசிய மகளிர் கபடி ஜாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி; 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.


கடைசியாக 2017-ல் நடத்தப்பட்ட ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி 8 வருடங்களுக்குப் பிறகு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்றது. ‘A’ பிரிவில் இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மலேசியா மற்றும் ‘B’ பிரிவில் ஈரான், ஈராக், நேபாளம் என மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன.


இதில், லீக் சுற்றுகள் முடிவில் இந்திய மகளிர் அணியானது, தனது பிரிவில் இடம்பெற்றிருந்த மற்ற மூன்று அணிகளையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி நடைபெற்ற அரையிறுதியில் நேபாள மகளிர் அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி 56-18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


மற்றொரு அரையிறுதியில், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஈரான் 41-18 புள்ளிகள் என வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பின்னர், இந்தியாவும், ஈரானும் நேற்று இறுதிப்போட்டியில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அபாரமாகச் செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் 32-25 புள்ளிகள் என த்ரில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.


2005 முதல் நடத்தப்பட்டு வரும் ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்த வெற்றியோடு சேர்த்து மொத்தம் 5 முறை இந்தியமகளிர் அணி மகுடம் சூடியிருக்கிறது. ஒரேயொரு முறை மட்டும் 2016-ல் தென் கொரியா சாம்பியன் பட்டம் வென்றது.