22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

திருமயிலாப்பு என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பெயர் கபாலீச்சுரம் சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால், தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற ஆணவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. பிரம்மா ஊழியில் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆவணம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.


பார்வதிதேவி சிவபெருமானிடம், உபதேசம் கேட்கும் வேளையில் மயில் ஒன்று நடனமாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தைக் கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். சிவசிந்தனையிலிருந்து விலகியதால் அம்பிகை தான் நோக்கிய மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டு வர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் அங்கேயே கோயில் கொண்டனர்.


பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது. வேதங்கள் பூஜித்ததால் வேதபுரி என்று பெயர். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்றும் பெயர். இராமபிரான், வழிபட்டு ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்திவித்தார். சிவநேசச் செட்டியர் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார். அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார். இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதினத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளியிடப்பட்டது.


திருமயிலைத் தலபுராணம்
சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இஃது மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. (இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னதிகளும் கூறப்பட்டுள்ளன.)
தேவாரப் பாடல்கள்: பதிகங்கள்: சம்பந்தர் – 1.மட்டிட்ட புன்னை (2.47),
பாடல்கள் : சுந்தரர் – கறைக்கண்டன் கழலடியே (7.39.8) திருத்தொண்டத்தொகை;
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் – குயிலொத் திருள்குஞ்சி (11.006.12) ஷேக்திரத் திருவெண்பா;
நம்பியாண்டார் நம்பி – மாறா அருளரன் (11.33.62) திருத்தொண்டர் திருவந்தாதி;
சேக்கிழார் – வரை வளர் மா மயில் (12.21.332) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மாடம் ஓங்கிய மயிலை (12.28.1084 ரூ 1119) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், மன்னு சீர் மயிலை (12.51.6) வாயிலார் நாயனார் புராணம்.


Specialities:
கிழக்கில் ஏழு நிலை ராஜகோபுரம், தலமரம் புன்னை மரம் அருகே புன்னைவனநாதர் சந்நிதி உள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூஜித்ததால் மயில் உருவமும் சிலா ரூபத்திலுள்ளது. இது, வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்தத் திருப்பதி, முத்தித் தலம்; “துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்” என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார்.


குருபூஜை நாள்
: மார்கழி – ரேவதி. வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது. பூம்பாவை குடத்தினின்றும் தோன்றும் திருவுருவமும் பிள்ளையார் பதிகம் பாடும் திருவுருவமும் உடனாகத் தனிக்கோயிலாக வெளிச் சுற்றினுள் மேற்குக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் அமைத்து வழிபடப்பட்டு வருவது தரிசிக்க தக்கது. பங்குனி மாதத்தில் 10 நாள் பிரம்மோத்சவம், அறுபத்து மூவரின், திருவிழா, சிறப்பாக நடைபெறுகிறது. தைப்பூசத்தை ஒட்டிய பௌர்ணமி தெப்போத்சவம். அன்று சிறப்பாகக் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.


மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு: பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரையருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும். கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.


சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone Excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. (“ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை”, “மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” – சம்பந்தர், “கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே” – திருப்புகழ்).


பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது. இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுகளின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுகள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகள் 1923 -ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள்.


அவைகளில் தமிழ் கல்வெட்டுக்கள் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம். சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.


ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.


மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள்:
H.D.Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume-I பக்கம் 321-322) பிரெஞ்சுகாரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸ்வரர் சன்னதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672-லேயே இருந்தது எனலாம். 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.


“துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை…” என்று ஆரூரர் திருவாய் மலர்வது போல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. –I Chapter 23-ல் ஆசிரியர் H.D.Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான். 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256/1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.


துறைமுகப்பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. –I என்ற நூலில் நன்கு விளங்கும். சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.


மயிலை வாசிகளாயிருந்த பல வியாபரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுகளால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும். திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவோரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்து பாடுகிறார். “மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார்.